பத்தாம் வகுப்புத் தேர்வுகள் சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. தேர்வுகள் முடிவடைந்ததால், பல இடங்களில் மாணவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைக் கொண்ட கண்காணிப்புப் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் 75 மையங்களில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதமும், பெரிய கல்வி மாவட்டங்களில் 2 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எளிமையான சமூக அறிவியல் தேர்வு: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. சராசரியாகப் படிக்கும் மாணவர்கள்கூட இந்தத் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத்தைத் தவிர மீதமுள்ள தேர்வுகள் அனைத்தும் எளிதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வில் காப்பியடித்ததாக சேலம் மாவட்டத்தில் 5 பேர் உள்பட மொத்தம் 16 பேர் பிடிபட்டனர்.
6 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் எப்போது? பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 (சனிக்கிழமை) முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதம்
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் சற்றுத் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஏப்ரல் 30-ஆம் தேதிதான் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பிளஸ் 2 மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாட விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்ற நிலையில், பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.
அதேநேரத்தில், பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்படுவது கடந்த ஆண்டை விட தாமதமாகுமா என்பதை இப்போதே கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடைத்தாள் திருத்தத்துக்குப் பிறகு சி.டி.க்களில் வழங்கப்படும் மதிப்பெண் விவரங்கள் பிழையில்லாமல் இருந்தால், தேர்வு முடிவுகள் வழக்கம்போல வெளியிடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 23 முதல் கோடை விடுமுறை
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதன்பிறகு, 2 நாள்கள் பள்ளிகள் செயல்படும். ஏப்ரல் 23 முதல் மே 31 வரை இந்தப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி திங்கள்கிழமையாக இருப்பதால் பெரும்பாலும் அன்றைய தினமே பள்ளிகள் திறக்கப்படும். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை