Ad Code

Responsive Advertisement

குழந்தைகளுக்கான அறிவுக்களஞ்சியம் விருது: போட்டியில் பங்கேற்க ஆகஸ்ட் 1-க்குள் பதிவு செய்யலாம்

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 27-ஆவது அறிவுக் களஞ்சியம் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 7-இல் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க ஆகஸ்ட் 1-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் எம்.டி.எஸ்.அகாதெமி, நேரு யுவகேந்திரா, பாரதிய வித்யா பவன் ஆகியன இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.

இதுகுறித்து எம்.டி.எஸ்.அகாதெமி நிறுவனச் செயலர் சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மேல் நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 9.30 முதல் 1 வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் 5.30 வரை நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறும்.

இதில் திருக்குறள், திருவள்ளுவர் ஆத்திசூடி, நாலடியார், பாரதிதாசன் பாடல், ஆங்கிலக் கவிஞன் டென்னிசன் கவிதை ஒப்பித்தல் போட்டிகள், கதை சொல்லல், மாறுவேடம், கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் இசைப் போட்டிகளும் நடைபெறும்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் முதல் ஐவருக்கு முறையே அறிவு மலர், அறிவுக்கதிர், அறிவுத்தளிர், அறிவுத் துளிர், அறிவுப் புதிர் ஆகிய ஐந்து அறிவுக்களஞ்சியம் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரும் 10 போட்டிகளில் பங்கேற்கலாம்.

பத்துப் போட்டிகளிலும் பங்கேற்று முதல் மதிப்பெண் பெறுபவருக்கு அறிவுக்களஞ்சியம் விருதும், ரூ. 2,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு "எம்.டி.எஸ்.அகாதெமி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், ஸ்ரீ.கற்பகவல்லி வித்யாலயா, 4, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4' என்ற முகவரியிலும், 044-24951415 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement