Ad Code

Responsive Advertisement

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய தரவரிசைப் பட்டியல்: அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது

பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளுக்கு வெளியிடப்பட உள்ளதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் (ரேங்க்) 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட உள்ளது. மத்திய அரசு அமைக்க உள்ள தனி வாரியம் இந்தத் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும்.

உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்தது. இதன்படி, பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகள், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது கலை, அறிவியல் கல்லூரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலும் தனித் தனியாக வெளியிடப்பட உள்ளது. இதற்கான தர அளவீடுகளை யுஜிசி வகுத்து, தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டத்துக்கு வழங்கியுள்ளது.

இந்த அளவீடுகள் தரவரிசைத் திட்டத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ண்ழ்ச்ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் அடுத்த வாரம் வெளியிடப்பட்டுவிடும். இதற்காக நாடு முழுவதும் உள்ள கலை - அறிவியல் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இணைப்புப் பெற்றுள்ள கல்லூரிகளை தரவரிசைக்கான விவரங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தரவரிசை வருகிற 2016-17ஆம் கல்வியாண்டு முதல் வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

தரவரிசைப்படுத்துவது எப்படி?: ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி, வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் "ஏ' பிரிவின் கீழ் வரிசைப் படுத்தப்படும். பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் -பி- பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும்.

2 ஆண்டுகளுக்குத் தடை: வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகள் சார்பில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களும், அந்தந்தக் கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க அறிவுறுத்தப்படும்.

இந்தத் தகவல்கள் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை அல்லது போலியானவை என்பது கண்டறியப்பட்டால், அந்தக் கல்லூரி தரவரிசைப் பட்டியல் நடைமுறையில் பங்கேற்பதிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முறைகேடு குறித்த விவரமும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement