Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் தற்கொலை; இளம் மனதை துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்

மாணவர்கள் மத்தியில், குறைந்து வரும் சகிப்புத்தன்மையால்,எதிர்மறை எண்ணங்கள் அதிகளவில் தலைதுாக்கி வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 153 பள்ளி,  கல்லுாரி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இன்றைய கல்விமுறையில் உள்ள குளறுபடிகளே, இதற்கு முக்கிய காரணமாவதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

இன்றைய கல்விமுறையை பொறுத்தவரையில், மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறவும், வேலைவாய்ப்பு என்ற இரு கோணத்தில் மட்டுமே மாணவர்களை அழைத்துச்செல்கிறது. புதிய சிந்தனை, சகிப்புத்தன்மை, சமூக அக்கறை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம், தோல்விகளை ஏற்கும் மனபலம் போன்றவற்றை கற்பிப்பதில்லை.

இதன் காரணமாகவே, இன்றைய தலைமுறைகள் மத்தியில் அதிகப்படியான வன்முறை, எதிர்மறை எண்ணங்கள் எட்டிப்பார்கின்றது. தமிழகத்தில் கடந்த, 2009 - 2014 ஆகஸ்ட் வரை, 83 ஆயிரத்து, 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் மாணவர்கள், 2449 பேர். சென்னையில், 13 ஆயிரத்து, 506 பேர் தற்கொலை செய்ததில், மாணவர்கள், 363 பேர். கோவையை பொறுத்தவரை, தற்கொலை செய்தவர்கள் 6383. இதில் மாணவர்கள் 153 பேர். இம்மாணவர்கள் அனைவரும், 15-24 வயது உடையவர்கள்.

இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை விகிதம், 25 சதவீதம் அதிகரித்துள்ளது. தினசரி சராசரியாக, 390 பேர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்கின்றனர். அதில், 10 பேர் காதல் தோல்வியால் இறக்கின்றனர். காதல் தோல்வியால் இறப்பவர்களின், 15 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

உளவியல் நிபுணர் கோதனவல்லி கூறியதாவது:தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது வேதனைக்குரியது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில், சகிப்புத்தன்மையை காண முடிவதில்லை. பெரும்பாலும், வேலை இல்லை, காதல் தோல்வி காரணமாகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இம்முடிவை எடுகின்றனர். 

இயந்திரத்தனமாக மனநிலை கொண்ட மாணவர்களை இக்கல்வி உருவாக்கி வருகிறது. இதனால் எதிர்கால சமூகம் பல்வேறு சிதைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு முறை தற்கொலை எண்ணம் கொண்டு முயற்சி செய்யும் ஒருவர், மூன்று முறை மறுபடியும் முயற்சி செய்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி யாராக இருப்பினும், பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு பிரச்னைகளை களைந்துவிடவேண்டும். ஆறுதல் கூறுவதால், தற்காலிகமாக மட்டும் தீர்வை தரும். இவ்வாறு, அவர் கூறினார். 
இன்றைய கல்விமுறை யை பொறுத்தவரையில், மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறவும், வேலைவாய்ப்பு என்ற இரு கோணத்தில் மட்டுமே மாணவர்களை அழைத்துச்செல்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement