Ad Code

Responsive Advertisement

880 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்: ஓரிரு நாள்களில் அறிவிக்கை வெளியீடு

தமிழகத்தில் காலியாகவுள்ள 880-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் காவல் துறையில் நடத்தப்படும் தேர்வு இதுவாகும் என அந்தத் துறையினர் கூறுகின்றனர்.

தமிழக காவல் துறையில் கடந்த 2012-ஆம் ஆண்டு காவலர் பணி முதல் பல்வேறு நிலைகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு சுமார் 13 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு, மிகப்பெரிய அளவில் தேர்வு எதுவும் நடைபெறவில்லை.

இதற்கிடையே, காவலர்களின் பணிச் சுமையைக் குறைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் இளைஞர் படை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். 10 ஆயிரம் பேர் வரை அந்த இளைஞர் படையில் சேர்ந்துள்ளனர்.

உதவி ஆய்வாளர் தேர்வு: இந்த நிலையில், நிகழாண்டு (2015) காவலர் தேர்வை நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்து, உள்துறை வட்டாரங்கள் கூறியது:

காவலர், உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு நிலைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. அவற்றில், 886 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், 227 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் இடங்களும் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திடம் இருந்து உள்துறைக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, நிதித் துறை அனுமதியுடன் அதற்கான ஒப்புதலை உள்துறை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படும்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் முடிக்கப்பட்டு, நிகழாண்டு இறுதிக்குள் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement