கோவை மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் ஆதார் எண் சமர்ப்பிக்காத 2,260 ஓய்வூதியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட கருவூல அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களில் 2,260 பேர் அவர்களது ஆதார் எண்ணை கருவூலங்களில் சமர்ப்பிக்கவில்லை. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கு ஜீவன் பிரமான் மூலமாக மின்னணு வாழ்வு சான்றிதழ் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் கருவூலங்களில் இருந்து தொலைப்பேசி வாயிலாக ஆதார் எண் சமர்பிக்காத ஓய்வூதியர்களை தொடர்பு கொண்டு அவர்களது ஆதார் எண் பெறப்பட்டு வருகிறது. எனவே இதுவரையில் ஆதார் எண்ணை சமர்பிக்காத ஓய்வூதியர்களும், புதிதாக ஆதார் எண் பெறப்பட்டு அதனை சமர்ப்பிக்காதவர்களும் உடனடியாக ஓய்வூதியம் பெறும் கருவூலங்களில் ஆதார் எண்ணை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.