Ad Code

Responsive Advertisement

வங்கிகளில் திரண்ட அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள்

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் அவர்களது வங்கிக் கணக்கில் புதன்கிழமை செலுத்தப்பட்டன. இதனை எடுப்பதற்காக வங்கிக் கிளைகளில் காலையில் இருந்தே அரசு ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


பல வங்கிக் கிளைகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை தலைமைச் செயலகம், எழிலகம் உள்பட பல முக்கிய அரசு அலுவலகங்களில் மாத ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுப்பதற்காக அரசு ஊழியர்கள் காலை 9 மணியில் இருந்தே காத்திருந்தனர்.
வழக்கமாக பணிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அரசு அலுவலகங்களுக்குச் சென்ற அவர்கள், நேராக வங்கிக் கிளைகளில் ஏற்கெனவே காத்திருந்த வாடிக்கையாளர்களின் வரிசைகளில் இணைந்து கொண்டனர். இதனால், பல வங்கிக் கிளைகளில் சாலைகள் வரை வாடிக்கையாளர்களின் வரிசை நீண்டிருந்தது.
ரொக்கத்துக்கு கட்டுப்பாடு: அரசு ஊழியர்கள் பலருக்கும் ரூ.40 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இதனை எடுப்பதற்கு அவர்களால் புதன்கிழமை முடியவில்லை. ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் இலக்கு வைத்தே ரொக்கமாக பணம் வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சிண்டிகேட், இந்தியன் ஓவர்சீஸ் ஆகிய இரண்டு வங்கிக் கிளைகளிலும் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால், பிற இடங்களில் இதைவிட குறைவாகவே ரூ.5 ஆயிரம் அளவுக்கு மட்டுமே ரொக்கமாக பணம் அளிக்கப்பட்டது.
கூட்டம் ஓயாது: வங்கிக் கிளைகளில் மாத ஊதியத்தை எடுப்பதற்கான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் வரிசை இன்னும் ஒரு வாரத்துக்குத் தொடரும் என வங்கித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்களின் ரொக்கப் பணத்துக்கு கட்டுப்பாடுகள் வைத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதத்துக்கு 1,300 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியமும், ஓய்வூதியமும் அளிக்கப்படுகிறது. இது மாநில அரசு ஊழியர்களுக்கான பணம் மட்டுமே. இந்தப் பணத்தை ஒவ்வொரு ஊழியரும் அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
போக்குவரத்து தொழிலாளர்கள்: தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாத ஊதியத்தில் இருந்து ரொக்கமாக ரூ.3 ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அனைத்து பணிமனைகளிலும் காலையில் இருந்தே இதற்கான பணிகள் நடைபெற்றது. இதனால், பணிக்கு வந்த அனைத்து நடத்துநர், ஓட்டுநர்கள் தங்களுக்கான ரொக்கப் பணத்தை வரிசைகள் ஏதும் இல்லாமல் வாங்கிச் சென்றனர்.
ரொக்கப் பணம் வழங்கும் பணி மாலை வரை நடைபெற்றதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement