Ad Code

Responsive Advertisement

நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி., என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மயக்கவியல் - 91; பொது மருத்துவர் - 30; மகப்பேறு மருத்துவர் - 130, ரேடியாலஜி - 22 பேர் உட்பட, 414 சிறப்பு பிரிவு, உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை தற்காலிக பணியில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.'போட்டி தேர்வுகள் இல்லை; நேரில் வந்தால் போதும், வேலையில் சேரலாம். இதற்கு, நவ., 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:உயர் சிறப்பு மருத்துவம் படித்தோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதிர்பார்த்ததை விட சம்பளமும் கிடைக்கிறது; இதனால், அரசு பணியில் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. எனவே, நிலைமையை உணர்ந்த அரசு, நேரில் வந்தால் வேலை என, சிவப்புக் கம்பளம் விரிந்துள்ளது. இதற்கு உரிய பலன் கிடைக்குமா என, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுதவிர, முதுநிலை மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனைகளில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றி வரும், 1,800 டாக்டர்களையும், அரசு பணி வரன்முறை செய்யஉள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement