Ad Code

Responsive Advertisement

பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்):

இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும். இந்தநிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தால் போதும்; தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார், மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத்தலைவர் டி. குமணன்.


அவர் கூறியது:இந்த வயது தான் மாணவர்களின் உடலில் நிறைய மாற்றங்களைத் தரும் பருவம். ஹார்மோன்கள் முதிர்ச்சி அடையும் பருவம். இந்த பருவத்திற்கு உரிய பதட்டம், ஆசைகளைத் தாண்டி வாழ்க்கையில் முக்கியமான துறையை தேர்ந்தெடுப்பதற்கான காலகட்டம் இந்த தேர்வு காலங்கள் என்பதை பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.


கொஞ்சமாவது பதட்டம் இருந்தால் தான் மாணவர்கள் நன்றாக படிப்பர்; கவனமும் அதிகமாகி நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். பதட்டமே இல்லாமல் இருந்தாலோ, அதிக பதட்டத்துடன் இருந்தாலோ தவறு. கவனச்சிதறல் ஏற்படுத்தும் அலைபேசி, வாட்ஸ் ஆப், இணையதள தொடர்பில் இருந்து விலக வேண்டும். தொடர்ந்து படிப்பதை விட இடையிடையே நடக்கலாம்; மனதுக்கு பிடித்தமான பாட்டு, இசையை கேட்டால் மனம் புத்துணர்வு பெறும்.


தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் கண்டிப்பாக துாங்க வேண்டும். காபி, டீ குடித்து துாக்கத்தை ஒத்தி வைத்து படிப்பது தவறு. இதனால் சோர்வு அதிகமாகி படித்ததும் மறந்துவிடும். படித்தால் மறக்கிறது என்றால் ஞாபகம் வர எழுதிப் பார்க்கலாம்.


இப்போது பெற்றோர்களே பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கின்றனர். பிள்ளைகள் தான் தேர்வெழுத முடியும் என்கிற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். 'கண்முன்னே உட்கார்ந்து படி' என கண்காணிக்கக்கூடாது. படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலைத் தந்தால் போதும். தேர்வு நேரங்களில் பிள்ளைகளுக்கு அதிக வேலை தரக்கூடாது.


தேர்வு நேரத்தில் படிக்காவிட்டால், 'நீ உருப்பட மாட்டாய்; பெயிலாவாய். உன் வாழ்க்கை அவ்வளவு தான்' என பயமுறுத்தக்கூடாது. அது பிள்ளைகளிடம் அனாவசிய பதட்டத்தை ஏற்படுத்தி மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். 'உன்னை நம்பியிருக்கிறோம். முதல் மதிப்பெண் பெறணும்' என, உங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணித்து தேர்வு பயத்தை உருவாக்க வேண்டாம்.


என்ன கேள்வி வரும், திருத்தும் ஆசிரியர் யார் இவற்றை யாராலும் கணிக்கமுடியாது. தேர்வு என்பது யுத்த மல்ல. நல்லது தான் நடக்கும். நடப்பதை ஏற்றுக் கொள்வோம் என, உடல், மனரீதியாக தேர்வை கடந்து செல்ல பிள்ளைகளுக்கு பெற்றோர் உதவவேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார். மனநல டாக்டர் குமணன் ஆலோசனை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement