Ad Code

Responsive Advertisement

ஏழை மாணவர்களும் உலகத்தரமிக்க கல்வி பெறும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார் : அமைச்சர் பி.தங்கமணி

ஏழை மாணவர்களும் உலகத்தரமிக்க கல்வி பெறும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்துள்ளதாக தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, சேந்தமங்கலம், களங்காணி ஆகிய இடங்களில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சாந்தி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான நலத்திட்டங்கள், 4 செட் சீருடைகள், விலையில்லாக் காலணிகள், பாடப்புத்தகங்கள், அவற்றை எடுத்துச் செல்ல அழகான புத்தகப்பை என அனைத்தையும் முதல்வர் வழங்கி வருகிறார். மாணவர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது அனைவரும் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்று 100 சத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும் தான்.

வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியில் அனைவருக்கும் கணினி அறிவு கட்டாயம் தேவை என்பதற்காக பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினிகளை ஏழை வீட்டுப் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதற்காக இலவசமாக வழங்கி வருகிறார்.

இத்தகைய திட்டத்தால் தமிழகத்திலுள்ள மாணவ, மாணவிகள் கல்வியில் உயர்ந்து, கணினி அறிவில் சிறந்து விளங்குவதோடு உலகத்தரம் மிக்க கல்வியைப் பெற்று வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதோடு, தமிழகம் 100 சதவிகிதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக விரைந்து உருவாகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

முதல்வரின் திட்டங்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்து முதல்வரின் சிறப்புப் பரிசை பெற்றனர். இதைப் போலவே எல்லா மாணவ, மாணவியரும் நன்றாகப் படித்து சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என்றார்.

மொத்தம் 22 பள்ளிகளைச் சேர்ந்த 2,051 மாணவ, மாணவியருக்கு ரூ.76.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா மதிவண்டிகளையும், 18 பள்ளிகளைச் சேர்ந்த 1,757 மாணவ, மாணவியருக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளையும் அமைச்சர் வழங்கினார்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், கோட்டாட்சியர் எம்.கண்ணன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement