Ad Code

Responsive Advertisement

பி.எட்., படிப்பிற்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. யோகா, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் பால்வாடி கல்விக்கு தனி பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பி.எட்., - எம்.எட்., போன்ற கல்வியியல் பயிற்சி படிப்புகள், இதுவரை, ஓராண்டு பட்டப்படிப்பாக இருந்தன. இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து, தமிழகத்தில், சுயநிதி கல்லுாரிகள் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை, நவ., 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு துவங்கியுள்ளது. அத்துடன், முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.

அதில், யோகா உட்பட, மூன்று கட்டாயப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள, 33 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், உயிரியல், அமைதி மற்றும் சுற்றுச்சூழல், கணிதம், கணினி அறிவியல், 'ப்ளே ஸ்கூல்' கல்வி போன்ற படிப்புகள் இடம் பெற்றுள்ளன. கணினி அறிவியலில், புதிதாக, மூன்று செயலிகள் (ஆப்) கண்டுபிடிப்பது, செய்முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்ஜி., பட்டதாரிகள் ஆர்வம்!தமிழகம் முழுவதும், 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பி.இ., படித்தவர்கள், 200 பேர் ஆர்வமாக விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.வரும், 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங், 28ம் தேதி நடக்க உள்ளது.

பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்றவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement