Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் ஆய்வுக்குழு அரசுக்கு 'நோட்டீஸ்'

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தோல்வியடையச் செய்வது குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கக் கோரி தாக்கலான வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. 

மதுரை அருகே, பேரையூர் தொட்டியபட்டி பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு:

என் மகன் சஞ்சய் கண்ணன், 14, திருமங்கலம், ஆலம்பட்டி, 'டெடி மெட்ரிக் பள்ளி'யில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். அதே வகுப்பில், அவரது நண்பர் சங்கரபாண்டியும் படித்தார். பள்ளி ஆசிரியர்கள், 'உங்கள் மகன் நன்றாக படிக்கவில்லை; 10ம் வகுப்பிற்கு அனுமதிக்க முடியாது. அனுமதித்தால், 100 சதவீத தேர்ச்சி பாதிக்கப்படும்' என்றனர். சஞ்சய் கண்ணன், சங்கரபாண்டியை, ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடையச் செய்தனர். 

இருவரையும், ஒன்பதாம் வகுப்பில் அனுமதிக்காமல் வேறுபடுத்தி, மூன்று நாட்கள் தனிமைப்படுத்தினர். இதனால், மாணவர்கள் இருவரும் மனமுடைந்தனர். இந்நிலையில், கடந்த, ஜூன், 9ல், என் மகன் மாயமானார்.மறுநாள், சஞ்சய்கண்ணன், சங்கரபாண்டி ஆகியோர், திருமங்கலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர். 

பள்ளியில் வேறுபடுத்தி நடத்தியதே தற்கொலைக்கு காரணம். தற்கொலைக்கு, பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். பல பள்ளிகளில், 10ம் வகுப்பில் அதிக தேர்ச்சி பெறுவதற்காக, ஒன்பதாம் வகுப்பில், மாணவர்களை தோல்விடையச் செய்கின்றனர். அரசு, இதை கண்டறிய, தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, பாண்டியம்மாள் மனு செய்துஇருந்தார். நீதிபதி ஆர்.சுப்பையா, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், மதுரை கலெக்டர் ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement