Ad Code

Responsive Advertisement

கர்நாடகா : ஆசிரியர் இடமாற்ற திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்:5 ஆண்டுகளாக இருந்த விதிமுறை தளர்வு

ஆசிரிய தம்பதிகளை இடமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும், கர்நாடக மாநில சிவில் சேவைகள், ஆசிரியர்கள் இடமாற்ற கட்டுப்படுத்தும் இரண்டாவது திருத்த மசோதாவுக்கு, சட்டசபை, நேற்று ஒப்புதல் அளித்தது.

கர்நாடகா சட்டசபையில் நேற்று, 'கர்நாடக மாநில சிவில் சேவை'கள், ஆசிரியர்கள் இடமாற்ற கட்டுப்படுத்தும் இரண்டாவது திருத்த மசோதாவை, துவக்க கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தாக்கல் செய்தார்.

கைவிட வேண்டும்:அவர் பேசியதாவது:ஆசிரியர்களாக பணியாற்றும் கணவன்- - மனைவியை இடமாற்றும் சந்தர்ப்பத்தில், அவர்கள், ஐந்து ஆண்டு பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதிமுறையை கைவிட வேண்டும். அரசு நிதியுதவி பெறாத பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், இந்த இடமாற்றத்தை விஸ்தரிக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள், முந்தைய திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை. தற்போது, இந்த அம்சங்களை சேர்த்து, 'இரண்டாவது திருத்த மசோதா' சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை:இந்த திருத்த மசோதாவின்படி, 2005, மே 4ம் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணியில் ஒருமுறை தகுதி அடிப்படையில், வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று, கணவன் பணியாற்றும் இடத்துக்கு மனைவியையோ அல்லது மனைவி பணியாற்றும் இடத்துக்கு கணவரையோ இடமாற்றம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கு முன், ஆசிரியர் தம்பதியர் இடமாற்றம் தொடர்பான மசோதாவுக்கு, சட்டசபையில் ஒப்புதல் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தில், ஐந்து ஆண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்குவதாக நம்பிக்கை அளித்திருந்தேன். அதன்படி, அதை விதிமுறையிலிருந்து நீக்கி, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, உறுப்பினர்கள் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

இந்தாண்டு ஆசிரியர்கள் இடமாற்றம், கவுன்சிலிங் தாமதமாவதற்கு கல்வித்துறை காரணமல்ல. இடமாற்றம் திருத்த மசோதா, கவர்னரின் ஒப்புதல் பெற்று வர தாமதமானது. பின், கிராம பஞ்சாயத்து தேர்தல் வந்ததால், ஆசிரியர்கள் இடமாற்ற கவுன்சிலிங் தாமதமானது.

9,000 பேர் பயன்:இந்தாண்டு, 82 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் விரும்பி, விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 13 ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த திருத்த மசோதா செயல்படுத்தப்பட்டால், 9,000 ஆசிரியர்களுக்கு அனுகூலமாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

பா.ஜ., - விஸ்வேஸ்வர ஹெக்டே ஹாகேரி: இந்த திருத்த மசோதாவுக்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆசிரியர் தம்பதியர் இடமாற்றத்துக்கு, எப்போதும் வாய்ப்பு இருக்க வேண்டும். அரசு நிதியுதவி பெறாத பள்ளிகளின் ஆசிரியர் தம்பதிகளுக்கும், இந்த சலுகை விஸ்தரிக்கப்பட வேண்டும்.

இடைமறித்த சபாநாயகர் திம்மப்பா: ஆசிரியர் கவுன்சிலிங்கால், தொந்தரவு ஏற்படுகிறது.
பா.ஜ., - ஹாகேரி: கவுன்சிலிங் நடைமுறை வரவேற்கத்தக்கது. காலியாக உள்ள ஆசிரியர் இடங்கள் நிரப்பப்பட்டால், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

பா.ஜ., - ரவி: கணவன், மனைவி ஆசிரியர்கள் இடமாற்றம் சந்தர்ப்பத்தில், குறிப்பிட்ட சதவீதம் என்று எல்லை நிர்ணயித்துள்ளீர்கள்.

அதற்கும் அதிகமாக இடமாற்றம் இருந்தால், அந்த ஆசிரியர்களின் நிலை என்ன? ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு, விரிவான சட்டம் அவசியம்.இதுபோன்று பல உறுப்பினர்களும், தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதாவுக்கு குரல் ஓட்டு பதிவு மூலம், அங்கீகாரம் கிடைத்தது.

லோக் ஆயுக்தா திருத்த மசோதா மூலமாகவே லோக் ஆயுக்தா நீதிபதியை வெளியேற்ற, முயற்சிக்க வேண்டும். மக்கள், கடவுளை நினைக்கின்றனரோ இல்லையோ, மாநிலத்தின் ஆறு கோடி மக்கள், தினமும் லோக் ஆயுக்தா நீதிபதியை நினைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுஈஸ்வரப்பா ,மேலவை எதிர்க்கட்சி தலைவர் .

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement