Ad Code

Responsive Advertisement

பதவி உயர்வு பெற தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆசிரியைக்கு தகுதியில்லையா? தமிழ் பட்டதாரிக்கு தலைமை ஆசிரியை பதவி உயர்வு மறுத்த உத்தரவு ரத்து

 இளங்கலை தமிழ் பட்டதாரிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக, பதவி உயர்வு வழங்க மறுத்த, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

நிராகரிப்பு

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கதிரிமலை பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக புஷ்பராணி பணியாற்றுகிறார்; நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளிக்க கோரினார். இவரது மனுவை, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் நிராகரித்தார்.

'தமிழில் இளங்கலை பட்டம் (பி.ஏ., தமிழ்) பெற்றுள்ளதால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவிஉயர்வு வழங்க இயலாது' என, காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புஷ்பராணி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:பள்ளி கல்வித்துறை, 2007 ஜூனில் பிறப்பித்த அரசாணையில், 'எந்த பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும், அவர்களை பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவோ, பதவி
உயர்வுக்கு பரிசீலிக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது. 

நான்கு வாரத்திற்குள்...

அரசாணை, மனுதாரருக்கு சாதகமாக உள்ளது. ஆனால், சரிவர பரிசீலனை செய்யாமல், இளங்கலை தமிழ் பட்டம் ஒரு தகுதியிழப்பாகக் கருதி, இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்; அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர், புதிய உத்தரவை, நான்கு வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement