Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் (2001- 2006) அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது எனவும், தொடக்க கல்வியில் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர் விகிதாசாரம் கணக்கில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கவும் முடிவானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும் அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டன.

இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியல் '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' என்ற விதியை மாற்றி 100 சதவீதம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப (எண்:239, 240) உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பழைய உத்தரவை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:தொடக்கக் கல்வித் துறையில் 22.9.2007 ல் வெளியிடப்பட்ட உத்தரவால் இடைநிலை ஆசிரியர்களுக்கு எட்டு ஆண்டுகளாக, நுாறு சதவீதம் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் இத்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட, ஒன்றிய மாறுதலில் செல்ல வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் நலன் கருதி '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' என முன்பிருந்த உத்தரவையே மீண்டும் அமல்படுத்த கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement