Ad Code

Responsive Advertisement

வேலைவாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக்கூடாது : உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

'வேலை வாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனத்திற்கு தேர்வு செய்வது சட்டப்பூர்வமானதல்ல. அறிவிப்பு வெளியிட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும்,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

கரூர் வென்னிமலை மதி தாக்கல் செய்த மனு:கால்நடைத்துறையில் 350 ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை தேர்வு செய்ய கால்நடைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. எனக்கு 40 வயதாகி விட்டது எனக்கூறி பெயரை பரிந்துரை செய்யவில்லை. எனக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.அரசு வழக்கறிஞர், “290 காலிப் பணியிடங்களை நிரப்ப சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் மூலம் பரிந்துரைத்தனர். மனுதாரருக்கு வயதானதால் வாய்ப்பளிக்க முடியவில்லை,” என்றார்.
நீதிபதி: வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை மூலம் மட்டும் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது சரியான நடைமுறை அல்ல. இணையதளம், அலுவலக 
அறிவிப்பு பலகை, நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வழக்கை பொறுத்தவரை விரிவாக அறிவிப்பு செய்யவில்லை.
தகுதியானவர்கள் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. அரசின் அறிவிப்பு சட்டவிரோதமானது. அதை ரத்து செய்கிறேன். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டும் பணி நியமனத்திற்கு தேர்வு செய்வது சட்டப்பூர்வமானதல்ல. தற்காலிக பணியாளர்களைக்கூட அவ்வாறு நியமிக்கக்கூடாது. அப்படி நியமனம் செய்யப்படுவோர் சம்பளம் பெற தகுதியில்லை.
மனுதாரரைப் பொறுத்தவரை கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேல்நிலைக் கல்வியை பதிவு செய்துள்ளார். அவருக்கு பதிவு மூப்பு தகுதி உள்ளது. மனுதாரருக்கு 2 மாதங்களில் பணி வழங்குவது பற்றி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் வி.கண்ணன் ஆஜரானார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement