Ad Code

Responsive Advertisement

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், ஒசூரில் "கட்செவி அஞ்சல்' ("வாட்ஸ் அப்') மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செங்குட்டுவன் (திமுக), டில்லிபாபு (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), பிரின்ஸ் (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பாமக) ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் ஆட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் பேசினர்.

அதற்கு பதில் அளித்து, கே.சி.வீரமணி பேசியது:

ஒசூர் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தேர்வு மையங்களில் ஒன்றான பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3 இணைப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 323 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச் 18-ஆம் தேதி, கணிதம், விலங்கியல் பாடங்களைக் கொண்ட மாணவர்களுக்குத் தேர்வு நடந்தது. இதைக் கண்காணிக்கும் பணியில் ஒசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் ஈடுபட்டனர். காலை 11 மணியளவில் அந்த மையத்தின் அதிகாரி சீனிவாசன் பார்வையிட்ட போது, 2 ஆசிரியர்களின் கையிலும் செல்லிடப்பேசி இருப்பதைக் கண்டார்.

அதை வாங்கி ஆய்வு செய்தபோது கணித பாட கேள்வி தாள்களில் சில பக்கங்கள் "கட்செவி அஞ்சல்' (வாட்ஸ் அப்) மூலம் வேறு செல்லிடப்பேசிக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக 2 ஆசிரியர்களும் கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி மூலம் கிருஷ்ணகிரி போலீஸýக்கு புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கிருஷ்ணகிரி, ஒசூர், தருமபுரி ஆகியவற்றில் செயல்படும் 4 தேர்வு மையங்களுக்கு வேறு மாவட்டத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அரசு தேர்வு இயக்குநர் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் ஒசூர் கல்வி மாவட்ட அதிகாரி வேதகன் தன்ராஜ், புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஒசூர் மாவட்ட கல்வி இளநிலை உதவியாளர் ரமணராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத் துறை இயக்குநர் அனைத்து அலுவலகங்களுக்கும் விவரமான அறிக்கை, வழிகாட்டுதலை அனுப்பி உள்ளார் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement