Ad Code

Responsive Advertisement

பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை முதல் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் க.பிரகாஷ் கூறினார்.

இதுதொடர்பாக வேலூரில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

1999-இல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 1,500 தொகுப்பூதிய அடிப்படையில், இளங்கலைப் பட்டத்துடன் கணினி தொடர்பான டிப்ளமோ படிப்பு அல்லது இளங்கலை கணினி அறிவியல் படித்த 1,880 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் கணினி ஆசிரியர்களுக்கு 2008-ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 35 சதவீத மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணி நியமனம் அளிக்க தமிழக அரசு முற்பட்டது.

இதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடியதால் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவை 2010-இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால் அப்படி நடத்தப்பட்ட தேர்வில் 27 வினாக்கள் தவறானவை என்பதால், தேர்வு எழுதிய 792 பேரில் 140 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினோம். அத்துடன் கணினி ஆசிரியர்கள் அனைவருமே பி.எட். படிப்பை நிறைவு செய்து ஆசிரியருக்கான தகுதியை பெற்றோம்.

இந்தநிலையில் பி.எட். படித்தவர்களுக்கு பணி நியமனத்தைப் பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பள்ளிக்கல்வித் துறை பின்பற்றாமல் புதிதாக பி.எட். படித்தவர்களை நியமிக்க முற்பட்டதால், மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினோம். புதிய பணி நியமனத்துக்கு 4.4.2015 வரை தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில், அதே நாளில் புதிதாக 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலங்களில் கலந்தாய்வு நடத்தப்போவதாக அறிந்தோம்.

இது நீதிமன்ற அவமதிப்பு என்பதோடு, எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், சென்னை, சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார் பிரகாஷ்.



மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்

பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.செல்வகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வந்த கணினி பயிற்றுநர்களுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் இடம்பெற்றிருந்த வினாக்கள் குழப்பங்கள், தவறுகள் அதிகம் கொண்டதாக இருந்தன.

பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்ட முடிவுகளின்படி, பணிபுரிந்து வந்த 652 கணினி பயிற்றுநர்கள் 2013-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 புதிய கணினி பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் ஏப்ரல் 4-ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்கள் 14 ஆண்டுகள் பணி அனுபவம், பி.எட். கல்வி தகுதி கொண்ட நிலையில், வேறு வேலை தேடும் வயதைக் கடந்துள்ளதால், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன. அதனால், பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement