Ad Code

Responsive Advertisement

கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

மார்ச் 21-வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தில் வினாத்தாள் கசிவு பரிமாற்றம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பு விடுகிறது.
தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் கணிதப்பாட வினாத்தாள் ஆசிரியர்களுக்கு இடையே வாட்ஸ்–அப் மூலம் பரிமாறிக்கொண்டது பெற்றோர்–மாணவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் அளித்த விளக்கம் வருமாறு:–பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காத வகையில் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறோம்.தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி கையேட்டிலும் விளக்கமாக தெரிவித்து இருக்கிறோம்.கண்காணிப்பாளர்கள் தற்போது செல்போன்களை தேர்வு கட்டுப்பாட்டு அறையில் வைத்து செல்ல வேண்டும். அவசர தேவைக்கு மட்டும் முதன்மை காண்காணிப்பாளர் அறையில் செல்போனை பயன்படுத்தலாம். மற்றபடி அந்த மையத்தின் டெலிபோன் எண்ணை பயன்படுத்த வேண்டும் என அனைத்து கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால் ஓசூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. வினாத்தாள் வாட்ஸ்–அப் மூலம் தேர்வு கண்காணிப்பாளர் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்களும் ஒரு தனியார் பள்ளியை சேர்ந்தவர்கள். அவர்கள் இனி எந்த பள்ளியிலும் பணி செய்ய முடியாது.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்வு மையத்திற்குள் செல்போனை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறையின் உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கு.தேவராஜன் எச்சரித்துள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement