Ad Code

Responsive Advertisement

ஆக.11இல் அனைத்து மாவட்டங்களிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் ஜூலை 10-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் முதல்வரின் கவன ஈர்ப்பு கோரிக்கைப் பேரணி நடத்தி, மாவட்ட ஆட்சியர் மூலம் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜூலை 15-இல் நடைபெற்ற சமூக நலம், சத்துணவுத் திட்ட மானியக் கோரிக்கையில், சத்துணவு ஊழியர்களுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாதது சத்துணவு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

பள்ளி சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவுக்கென தனித் துறையை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் சத்துணவு வழங்கும் பணியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், அங்கன்வாடி மைய ஊழியர், உதவியாளர் ஆகியோரை முழு நேர ஊழியர்களாக அறிவித்து, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இந்தக் கோரிக்கைகளை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாதப் பட்சத்தில் கூட்டமைப்பின் சார்பில் செப்டம்பர் 15-ஆம் தேதி, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் ஒன்றுகூடி முதல்வரை சந்திப்பதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement