Ad Code

Responsive Advertisement

You Tube-ல் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!










அரசுப் பள்ளி என்றால் கேட்குற விஷயத்தில் சுருதி குறையும் இந்த காலத்தில், கணிதத்தை வெகு எளிதாக சொல்லிக்கொடுத்து அதை தன் செல்போனில் பதிவுசெய்து பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூபில் பதிவேற்றம் செய்து அசத்தி வருகிறார் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  கணக்கு டீச்சர் ரூபி கேத்தரின் தெரசா.
இவர் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள் என்பது வாவ் தகவல்.

1986-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து அதன்பிறகு  2007-ம் ஆண்டில் சேலம் அருகிலுள்ள சின்ன சீரகங்கபாடி அரசு பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குள்ள குழந்தைகள் படிக்க சிரமப்படுவது தெரிந்தது அதை போக்க வழிகளை தேடினேன். பிள்ளைகளுக்கு வித்தியாசமாக சொல்லி கொடுப்பது எப்படி என்று இணையத்தில் தேடினேன்.

 அதைவைத்து எனக்கிருந்த அனுபவத்தோடு சேர்த்து எளிதாக சொல்லிக் கொடுக்க, பிள்ளைகள் 98, 99 வாங்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்தது என் கற்பித்தலின் உற்சாக பயணம்” என்றவரின் வார்த்தைகளில் அத்தனை வாஞ்சை, அவரது வீடியோவைப் போல்.

‘‘பொதுவாக நான் வகுப்புக்குள் நுழைந்தவுடன் பிள்ளைகளிடம் “என்னை ஆசிரியரா நினைக்காதமா. உன்னுடைய அம்மாவாகவோ அல்லது உனக்கு யாரைப் புடிக்குமோ அவங்களா நினைச்சுக்கோடா கண்ணு. அப்படினா நீ நல்லா படிச்சுருவ” என்பேன். பொதுவாக அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் இல்லாமல், அல்லது பெற்றோரில் ஒருவர் இல்லாமல் படிக்க வருகின்ற குழந்தைகள்தான் ஏராளம். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் கண்ணீரில் கரைக்க வைக்கும். அதனாலேயே பாப்பு, செல்லம் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகித்து பாடங்கள் சொல்லி கொடுப்பேன். கண்டிக்கும்போது ‘பாப்பு’ என்கிற சொல்லை தவறவிடமாட்டேன்” என்கிறவர் தான் வாட்ஸ்அப்பில் வந்த கதையைச் சொன்னார்.

ஆரம்பத்தில் இணையத்தளத்தில் வீடியோ போடாலாமா வேண்டாமா என்ற பயம் இருந்துக்கொண்டே இருந்தேன். பிறகு, எளிய வகையில் வாய்பாடு கற்றுக்கொள்வதற்கு உதவியாகவும், காது கேட்காத குழந்தைகளும் பார்த்து புரிவது போல அனிமேஷன் செய்திருந்த அந்த வீடியோ அதிக வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து பேஸ்புக்கில் ‘வர்க்கப்படுத்துவது எப்படி?’ என்பதை வீடியோவாக பதிவேற்றம் செய்தேன். 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது இந்த வீடியோ. மூன்று வழிகளில் பெருக்கல் செய்வது எப்படி என்கிற வீடியோவை 63 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்” என்று சொல்லி வாயடைக்கிற ரூபி, இதுவரை 200 வீடியோக்களுக்கு மேல் எடுத்து அப்லோட் செய்திருக்கிறார்.

‘‘என்னோட வீடியோவ பார்த்துட்டு டீச்சர் இதைப் பத்தி போடுங்க, அந்த கணக்கு கஷ்டமா இருக்கு, அந்த முறை சொல்லி கொடுங்கனு பசங்க, அம்மாக்கள் ஆர்வமா கேக்க ஆரம்பிச்சாங்க. பத்தாம் வகுப்பு படிக்கின்ற குழந்தைகளுக்காக என்னுடைய பிளாக்கில் (http://rubitheresa.blogspot.in/) பல பகுதியில் இருந்தும் டீச்சர் இதைப்போடுங்க, இதை சொல்லிக்கொடுங்க என்று அழைத்து சொன்னார்கள். குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு என்னுடைய வீடியோ உதவியாக இருக்கிறது என்று சொல்லும்போது மகிழ்வாக இருக்கிறது.



உங்களுடைய வீடியோக்களை டவுன்லோடு செய்தே செல்போன் மெம்மரி தீர்ந்துவிடும் போலிருக்கிறதே, வீடியோ அதிகமாக இருப்பதால் செல்போன் ஹேங்க் ஆகுதே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் என்னுடைய முறையினை கடைப்பிடிப்பதாகவும், எங்களுக்கு பயிற்சி கொடுங்கள் என்கிறார்கள். வெளிநாட்டினர் என்னுடைய வீடியோவைப் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்”  என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

நீங்கள் வீடியோவில் பாடம் நடத்தும்போது சொல்லுடா கண்ணு, கவனிடா கண்ணு என்று சொல்கிறீர்களே?

“பாடம் நடத்தும்போது சொல்லுடா கண்ணு, பாருடா கண்ணு என்று குழந்தையை அழைக்கும் விதத்தை நிறைய பேர் பாதித்திருக்கிறது. எப்படி டீச்சர் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பொதுவாக குழந்தைகளிடம் அன்பாகப் பழகும்போது தான் அவர்களுடைய குணாதியசங்களும் மாறும். வெறும் படிப்பு மட்டுமல்ல, அவை பண்பையும் வளர்க்க வேண்டும். பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையிலேயே பண்பையும் சொல்லிக்கொடுக்க முடியும். என்னடா கண்ணு, என்னடா பாப்பு என்று பேசும்போது தான் என் மீது ஆசிரியர்கள் மீது பிடிப்பு ஏற்பட்டு. எந்த வளமும் இல்லாம அதே நேரம் படிக்கவும் சிரமப்படுற குழந்தைங்களுக்குத் தான் நான் தேவை.

வீடியோ டெக்னாலஜி எப்படி கையாளுகிறீர்கள்?

“வகுப்பில் கடைசி பத்து நிமிடம் வீடியோவுக்காக செலவழிக்கிறோம். இதற்காக சிம் போடாத போனைத் தான் உபயோகிக்கிறேன். வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே யூடிப் மற்றும் வாட்ஸ்அப்பில் அப்லோடு செய்து விடுவேன். இதற்கு என் மகனும், மகளும் உதவி செய்வார்கள்."

அரசு பள்ளியில் இருந்துகொண்டு இதனை எளிதாக செய்ய முடிகிறதா?

“தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு நிறைய வசதிகள் அரசுப் பள்ளிகளில் இருக்கிறது. நாம் எந்தளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது. டெக்னாலஜி மூலமாக குழந்தைகளுக்கு எப்படி கல்வி கற்றுக்கொடுப்பது என ஒவ்வொரு மாவட்ட அளவிலும் பயிற்சி வழங்கி வருகிறார்கள். நல்ல அங்கீகாரமும் இருக்கிறது. எங்கள் பள்ளிக்கு இயக்குநரே நேரடியாக வந்து பாராட்டி இருக்கிறார்.

உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

“என் அப்பாதான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். அம்மா மனநிலை பாதிக்கப்பட மிகுந்த சிரமத்துக்கு இடையில் அப்பாவின் உதவியோடு படித்து முன்னேறினேன். எனக்கு ஏற்பட்ட சிரமம், மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். மாரடைப்பு என்கிற கொடிய நோயால் என் கணவரும் பிரிந்துவிட என் மகன், மகள் துணையால் நான் இன்று நடமாடிக் கொண்டிருக்கிறேன். மகன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். என் மகளுக்கு சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைத்து, எனக்காக இங்கேயே கல்லூரியில் படிக்கிறாள். இப்படிப்பட்ட தங்கமான பிள்ளைகள் இருப்பதாலேயே என் பள்ளி வாழ்க்கை நிறைவாக போய்க்கொண்டிருக்கிறது" என்றபடி வகுப்பறைக்குச் செல்கிறார் ரூபி டீச்சர்.

வாழ்த்துகள் டீச்சர்....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement