Ad Code

Responsive Advertisement

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

பலருக்கும் கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு பெரும் முதலீடாக இருக்கிறது. நம் நாட்டில் கார் வாங்குவோரில் 80 சதவீதத்தினர் கடன் திட்டங்கள் மூலமாகவே, தங்களது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பழைய கார் வாங்கும்போது...
ஆனால், தங்களது வருவாய்க்கு தகுந்தவாறு சரியான கடன் திட்டங்களையும், பட்ஜெட்டையும் தேர்வு செய்வது மட்டுமின்றி, சரியான கால அளவில் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் திட்டங்களை தேர்வு செய்வதும் அவசியம். அதுகுறித்த சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.


கடன் திட்டம்
கார் கடன் திட்டங்கள் பல்வேறு திருப்பிச் செலுத்தும் கால அளவு கொண்டதாக இருக்கிறது. புதிய காருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் [84 மாதங்கள்] வரையிலும், பழைய காருக்கு 5 ஆண்டுகள் [60 மாதங்கள்] வரையிலும் திருப்பிச் செலுத்தும் கால அளவுகள் கொடுக்கப்படுகிறது. பழைய கார் என்றால் தயாரிப்பு ஆண்டுக்கு தக்கவாறு கார் கடன் திட்டத்தின் திருப்பிச் செலுத்தம் கால அளவு மாறுபடும்.

வருவாய்
வருவாய்க்கு தக்கவாறு திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம். கார் கடன் வாங்குவதற்கு, சிலருக்கு வருவாய் போதுமானதாக இருக்காது. அது போன்ற சூழல்களில், மனைவி அல்லது குடும்பத்தில் வருவாய் உள்ள மற்றொரு உறுப்பினரை இணை விண்ணப்பதாரராக சேர்த்துக் கொண்டு அதிகபட்சமான திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டத்தை தேர்வு செய்யலாம். இதன்மூலமாக, மாதத் தவணை குறைவாக இருக்கும் என்பதால், மாத செலவுகளை சமாளிக்க ஏதுவாகும். ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ரூ. 35,000 மாத வருமானம் உள்ளவர்கள் மாதத் தவணை ரூ.10,000க்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.


சரியான கால அளவு எது?
பொதுவாக புதிய காருக்கு கடன் வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழைய காருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தி விடுவது நல்லது. புதிய காருக்கு அதிகபட்சமான 7 ஆண்டுகள் வரை மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதுடன், நீண்ட நாள் திருப்பி செலுத்துவதால் உங்களது பொருளாதாரத்திலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

உபாயம்
மாத பட்ஜெட்டை கருதி, நீண்ட கால கடன் திட்டத்தை தேர்வு செய்துவிட்டாலும்கூட, அதன் பிறகு ஏதேனும் பெரிய தொகை வரும்போது, அதனை கார் கடனில் வரவு வைத்துவிடுங்கள். இதன்மூலமாக, திருப்பிச் செலுத்தும் கால அளவை குறைத்துக் கொள்ள முடியும். கார் கடன் வாங்கிய 6 மாதங்களுக்கு பின்பு இதுபோன்று கூடுதல் தொகையை வரவு வைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. சில வங்கிகளில் கடன் காலத்தில் 2 முறை கூடுதல் தொகையை வரவு வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. சரியான கால அளவு எது?

முன்பணம்
காரின் ஆன்ரோடு விலையில் 30 சதவீதத்தை செலுத்தி கார் வாங்குவது நல்லது. அதனை மீறும்பட்சத்தில், வட்டி விகிதம் அதிகரிப்பதோடு, நீண்ட காலம் செலுத்தும் கடன் திட்டத்தை தேர்வு செய்வதற்கு தள்ளப்படுவீர். எனவே, ஓரளவு முன்பணத்தை தயார் செய்து கொண்டு கார் வாங்கும் படலத்தை ஆரம்பிப்பது நல்லது. தற்போது புதிய காருக்கு ஆன்ரோடு விலையில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஆனாலும், அது உங்கள் பொருளாதாரத்திற்கு உசிதமாக இருக்காது.

பழைய கார் வாங்கும்போது...
கடன் திட்டத்தில் பழைய கார் வாங்குவதை தவிர்ப்பது நலம். மேலும், பழைய கார்களுக்கு ஆண்டுக்கு 15 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை வட்டி விகிதம் போடப்படுகிறது. கூட்டிக் கழித்து பார்க்கும்போது, ஒரு புதிய காரை தேர்வு செய்து வாங்குவது நல்லது. ஏன் தெரியுமா?

பழசுக்கு புதுசு பெட்டர்
புதிய காருக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.5 சதவீதம் என்ற சராசரி அளவில் உள்ளது. பழைய காருக்கு கூடுதலாக 5 முதல் 7 சதவீதம் வரை வட்டி செலுத்துவதை தவிர்க்க வழி வகை செய்யும். அத்துடன், ஓடிய காரில் என்னென்ன பிரச்னை இருக்கிறது என்பது தெரியாது. அத்துடன், பராமரிப்பு செலவு அதிகம் இருக்கும். ஆனால், புதிய கார் வாங்கும்போது இந்த அச்சங்களை தவிர்த்துக் கொள்ள இயலும் என்பதுடன், பராமரிப்பு என்பது சில ஆண்டுகளுக்கு பெரிய தொந்தரவாக இருக்காது

வங்கிகள்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் சிறப்பான கார் கடன் திட்டங்கள் உள்ளன. தகுந்த ஆவணங்கள் வைத்திருந்தால், குறைவான வட்டி விகிதத்தை பேரம் பேசி வாங்குங்கள். மேலும், உங்களது சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிகளில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். அத்துடன், பிராசஸிங் கட்டணம் இல்லாமலும் வாங்குவதற்கு வங்கி ஊழியரிடம் பேரம் பேசி பார்ப்பதும் உங்களுக்கு கூடுதல் பலன் தரும்.

இன்னொரு விஷயம்
உங்களது சம்பளம் அலுவலகத்திலிருந்து வங்கியில் வரவு வைக்கப்படும் தேதிக்கு சில நாட்கள் கழித்து மாதத் தவணை தேதி இருக்குமாறு வங்கியிடம் கடன் வாங்கும்போதே அவசியம் தெரிவித்துவிடவும். ஏனெனில், சில வங்கிகள் உங்கள் சம்பளம் வரும் தினத்திலோ அல்லது அதற்கு முந்தைய தினத்திலோ, மாதத் தவணை தேதியை நிர்ணயித்துவிடுவர். இதனால், ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே பணம் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். எதற்கு தேவையில்லாத டென்ஷன்...

அவசரம் வேண்டாம்...
இந்த விஷயத்தில் அவசரப்படாமல், அனைத்து வங்கிகளின் கடன் திட்டங்களையும், அதன் வட்டி விகிதங்களையும் அலசி ஆராய்ந்த பிறகே உங்களுக்கான கார் கடன் திட்டத்தை தேர்வு செய்வது எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.

வாழ்த்துகள்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement