Ad Code

Responsive Advertisement

ரேசன் கடைகளில் 15ம் தேதி முதல் ரூ.2000, மளிகை பொருள் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

 




உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட, பொது விநியோக திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். 


அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டு, கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.


இதில் வெளிப்படை தன்மைக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. 


இதனால், முதல் மாத கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் வரையில் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான வழக்குகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களின் வழக்கமான விநியோகம் ஒரு வார காலம் தாமதமாக தொடங்கிட நேரிட்டு, ஜூன் 10ம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே, ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் 11 முதல் 14ம் தேதி வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.  


இந்த டோக்கன்களின் அடிப்படையில், ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 15ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும், ரூ.2 ஆயிரத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லலாம்.  


முன்னர் வழங்கப்பட்ட நலத் திட்ட உதவிகள் பெறும்போது எழுந்த தனி மனித இடைவெளி சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 75 முதல் 200 வரையிலான பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறைகளுக்கு இடமளிக்காமல், இவ்விரு நலத் திட்ட உதவிகளை உரிய முன்னறிவிப்புடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், குறித்த நாள் மற்றும் நேரத்தில் பெற இயலாதவர்கள், வருகின்ற மாதத்தில் அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement