Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை


சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்திலும், கல்விக் கட்டணம் உயர்ந்து வருவதே, பெற்றோரின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
கல்விக் கட்டணம் எவ்வளவு, முந்தைய ஆண்டுடன் எந்த அளவுக்கு அது உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை வந்துள்ள தகவல்கள் குறித்து ஆராயப்படுகிறது. தகவல் அளிக்காத பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில், கல்வி கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும்,
அதனடிப்படையில் மசோதா கொண்டு வர திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதும் அதுபோன்ற மசோதா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement