Ad Code

Responsive Advertisement

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் 89,791 மாணவர்கள் சேர்க்கை


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தனியார் பள்ளிகளில் 89,791 மாணவர்கள் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை கோரி, மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 67,825 விண்ணப்பங்கள் சேர்க்கைக்குத் தகுதியானவை.

நுழைவுநிலை வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாகவும், அதை விடக் குறைவாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட 4,918 பள்ளிகளில், 28,752 இடங்களுக்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட 3,036 பள்ளிகளில், குலுக்கல் முறையில் 61,039 இடங்களுக்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7,954 பள்ளிகளில் 89,791 இடங்களுக்கு குழந்தைகள் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் விவரத்தை www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு, வரும் ஜூன் 5-ஆம் தேதி தொடர்புடைய பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும். அந்தக் குழந்தைகள் சார்பாக ஆவணங்கள் ஏதும் அளிக்க வேண்டியிருந்தால், அதை ஜூன் 5-ஆம் தேதிக்குள் தொடர்புடைய பள்ளியில் அளிக்க வேண்டும். மீதமுள்ள காலி இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து சேர்க்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் சார்பாக கல்விக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement