Ad Code

Responsive Advertisement

மாணவனை வெளியே தள்ளிய விவகாரம் - நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் இடமாற்றம்: கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை பூந்தமல்லி அடுத்த அகரம்மேல் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 200 பேர் படித்து வருகின்றனர்.  மேலும் மேப்பூர்தாங்கல் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்வேறு தரப்பினர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி  வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அன்பு (5) என்ற 1ம் வகுப்பு மாணவனை எக்காரணமும் கூறாமல் வகுப்பு ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையை  விட்டு வெளியேற்றி, வராண்டாவில் உட்கார வைத்துள்ளார்.

தலைமை ஆசிரியை மீதான முன்விரோதம் காரணமாக, 1ம் வகுப்பு மாணவனை வராண்டாவில் தள்ளியதாக உமா மகேஸ்வரி உள்பட 4 ஆசிரியைகள்  மீது புகார் கூறப்பட்டது. மேலும், பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து,  தலைமை ஆசிரியை சாந்தி சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை கூப்பிட்டு கண்டித்துள்ளார். இதனால் தலைமையாசிரியை மீதான முன்விரோதத்தில் பள்ளி  மாணவர்களிடம் ஆசிரியைகள் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே 1ம் வகுப்பு மாணவனை வெளியேற்றி வராண்டாவில் அமர வைத்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த  ஆசிரியையை கண்டித்து, பள்ளி முன் பெற்றோரும் பொதுமக்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர்  மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விசாரிக்க வந்தனர். பிரச்னைக்கு காரணமான  ஆசிரியைகள்,  தலைமையாசிரியை மற்றும் மாணவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணைக்கு பிறகு பிரச்னையில் ஈடுபட்டதாக 3 ஆசிரியைகளை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதன்படி உமா  

மகேஸ்வரியை குத்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கும், மகாலட்சுமியை நசரத்பேட்டையிலுள்ள பள்ளிக்கும், ராஜேஸ்வரியை  கம்மார்பாளையத்தில் உள்ள பள்ளிக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆசிரியை சபீதா மீதும் நடவடிக்கை எடுக்க  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement