பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் வெளியிட்டுள்ள
அறிக்கை:

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். 2014ஆம் ஆண்டில் இவர்களுக்கான ஊதியம்
ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 12 அரைநாள் என தொகுப்பூதியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் பண்டிக்கைகால போனஸ் கூட வழங்கப்படுவதில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பணியின்போது
உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடோ, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலனோ வழங்கப்படுவதில்லை.
எனவே, தொகுப்பூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.51.30 கோடியை, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் உறுதியளித்துள்ளதால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளார்..