பள்ளி ஆசிரியர் அடித்ததில் மாணவரின் செவித்திறன் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பம் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் பொ.பிரவீணா. இவரது கணவர் பொற்செழியன் உயிரிழந்துவிட்டார். இதனால், பிரவீணா தையல் வேலை செய்து தனது 2 குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார். மூத்த மகன் பிரதாப் கடலூரில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 3ஆம் பிரதாப் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்குச் சென்றார். இதுதொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கமால்பாட்ஷா மாணவரைக் கண்டித்தாராம். அப்போது, தனது பள்ளிச் சீருடை முந்தைய நாள் பெய்த மழையால் நனைந்திருப்பதால் சாதாரண ஆடையில் வந்ததாக மாணவர் தெரிவித்தார்.
இதை ஏற்காமல் ஆசிரியர் கமால்பாட்ஷா மாணவரை தேர்வு எழுதும் அட்டையால் அடித்ததாகத் தெரிகிறது. இதில் மாணவரின் காதுப் பகுதியிலும் அடி விழுந்ததாம். வீட்டுக்குச் சென்ற மாணவர் காது, தலைப் பகுதி வலிப்பதாக கூறினார். இதையடுத்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வலி அதிகமாகவே கடந்த 4ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மாணவரின் செவித்திறன் குறைந்திருப்பதும், காதுக்குள் நரம்பு மண்டலத்தில் ரத்தம் உறைந்திருப்பதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக பள்ளிக்குச் சென்று பிரவீணா கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாக கூறினராம். திங்கள்கிழமை மாணவரை மீண்டும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவப் பரிசோதனை செய்த போது, அவர் 80 சதவீதம் காது கேட்கும் திறனை இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பிரவீணா புகார் அளித்தார். அதன்பேரில், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் ஆசிரியர் கமால்பாட்ஷாவை மறுஉத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மாணவரின் மருத்துவப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், மாணவர் தொடர்ந்து கல்வி கற்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை