Ad Code

Responsive Advertisement

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய மக்கள் தொகை பதிவு ஆவணத்தில் இருந்து பெறப்படும் குடிமக்களின் பயோ-மெட்ரிக் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளாராக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை இந்திய பொது அடையாள எண் ஆணையகம் அங்கீகரித்துள்ளது.

குடிமக்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் சிறந்த சேவைகளை அளித்திட ஏதுவாக, ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டினை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மாநிலம் முழுவதும் 60 நிரந்தர பதிவு மையங்கள் அமைக்கப்படும்.இந்த நிரந்தரப் பதிவு மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும்.முதல் கட்டமாக இந்த நிரந்தர பதிவு மையங்கள், சென்னை மாநகராட்சி, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தாலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சென்னை நீங்கலாக இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் நிறுவப்பட்டு ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இந்த மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

புதிய கட்டடங்கள்: தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் தொழில்முனைவோர் மையங்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு கோவையில் உள்ள டைடல் பூங்காவில், வாடகைக் கட்டடத்தில் தொழில் முனைவோர் மையம் அமைக்கப்படும். இந்த மையத்துக்கு நாஸ்காம் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.மின் ஆளுமை இயக்குநரகம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியன சென்னை ஆழ்வார்பேட்டையிலும், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் எழும்பூர், நுங்கம்பாக்கத்திலும் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.இந்த நிறுவனங்களுக்கு கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement