Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகாததால், பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்கள் பாடத் திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.



தமிழக பள்ளி கல்வித் துறையில், ஒவ்வொரு வகுப்பின் பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுக ளுக்கு ஒரு முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். 20 ஆண்டு களாக, இந்த தொலைநோக்கு பார்வை மங்கி, பள்ளி கல்வியில் இலவசங் களை புகுத்தும் ஆர்வம், அதிகாரிகளிடம் அதிகரித்து உள்ளது.

தற்போதைய, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டம், 2007ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அது, 2005ம் ஆண்டில் தயார் செய்யப்பட்டதால், இந்த பாடத் திட்டத்தின் ஆயுட்காலம், 11 ஆண்டு களை எட்டி விட்டது. 2012ல், ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில், தமிழக அரசு அமைத்த கமிட்டி, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இது, 2013ல், தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

இதுவரை புதிய பாடத் திட்டத்தை அரசு அறிவிக்க வில்லை. தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளி கல்வி மானிய கோரிக்கை மற்றும் முதல்வரின், 110வது விதியிலாவது, பாடத்திட்டம் மாற்றம் குறித்த 

அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, 'நீட்' போன்ற தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களும், பெற்றோரும், கல்வியாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:

மத்திய அரசின்கல்வி, வேலைவாய்ப்பு தொடர் பான விரிவான திட்டங்களை, தமிழக மாணவர் களும் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாகியுள் ளது. இன்ஜி., படிப்புக்கும், நீட் தேர்வு வரும் என, கூறப்பட்டுள்ளது.தென் மாநிலங்களில், தமிழகம் தவிர மற்ற மாநில மாணவர்கள், மத்திய அரசின் போட்டி தேர்வு களில், சிறந்த மதிப்பெண் பெறுகின் றனர். பழைய பாடத் திட்டத்தில் படிக்கும், தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பாடத் திட்டத்தை கால தாமதமின்றி மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றம் அவசியம்':

தற்போது அமலில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை, 2002ல் பள்ளிக் கல்வி இயக்கு னராக இருந்த எஸ்.பரமசிவன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியது. 'சிலபஸ்' மாற்றம் குறித்து, அவர் கூறியதாவது:

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை 2002ல் உருவாக்கினோம். அது, 2006 முதல் அமலில் உள்ளது. நாங்கள் தயாரிக்கும் போது, இந்த பாடத் திட்டம் தரம்உயர்ந்ததாகவே இருந்தது. ஆனால், தற்போதைய வளர்ச்சிக்கு இந்த பாடத் திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. 

எந்த ஒரு பாடத் திட்டத்தையும், அதிகபட்சம், ஐந்து ஆண்டுகளுக்குள் மாற்ற வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் ஆண்டுக்கு ஒரு முறை கூடுதல் தகவல்களுடன் மாற்றப் 

படுகிறது. எனவே, நம்முடைய பாடத் திட்டம், 10 ஆண்டுகளாக தொடர்வது சரியல்ல. நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு பரமசிவன் கூறினார்.

'தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்' 
பாடத் திட்டத்தை மாற்றுவது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: 
பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தற்போதைய பாடத் திட்டம் அமலில் உள்ளது. 

மாணவர்களுக்கு அரைத்த மாவையே அரைத்தது போல, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கற்றுக் கொடுக்கும் நிலை உள்ளது. 
மத்திய அரசு சார்பிலும், பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும், பல போட்டி தேர்வுகளும், நுழைவு தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில், தற்போதைய பாடத் திட்டம் இல்லை. எனவே, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டங்களுக்கு இணையாக அல்லது அதைவிட தரம் உயர்ந்த புதிய பாடத் திட்டத்தை, அரசு தாமதம் இன்றி அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement