Ad Code

Responsive Advertisement

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு: பேராசிரியர்கள் முடிவு

இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலையின் சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் மாவட்டங்களில் உள்ள பல்கலையின், 13 உறுப்பு இன்ஜி., கல்லுாரிகள், இன்று திறக்கப்பட உள்ளன.

புதிய மாணவர்களுக்கு, பல்கலையின் மூத்த மாணவர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். 'ராகிங், ஈவ்-டீசிங்' போன்ற பிரச்னைகளை தடுக்க, சீனியர், ஜூனியர் மாணவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுக்கள், பேராசிரியர்கள் தலைமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து பிரிவு மாணவர்களுக்கும், பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அண்ணா பல்கலையின் கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம். தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களே எடுக்கப்பட்டுள்ளது. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 1 கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்கள் தெரியவில்லை.

இன்ஜினியரிங்கை பொறுத்தவரை, முதலாம் ஆண்டில் பெரும்பாலும் பிளஸ் 1 பாடங்களே அதிக அளவில் வரும். முதல் செமஸ்டரில் இடம் பெறும் பல பாடங்கள், பிளஸ் 1 சார்ந்தவை. எனவே, ஒரு வாரத்திற்கு புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த உள்ளோம். அதன்பின், பிளஸ் 2 பாடங்கள் ரிவிஷன் செய்யப்பட்டு, இன்ஜி., பாடங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement