Ad Code

Responsive Advertisement

பஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது: மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடை பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும், பள்ளிக்கூடத்திற்கு செல்போன்களை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


மேற்கூரை, படிக்கட்டில் பயணம்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பிற்கென, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வருமாறு:-



* பள்ளி மாணவர்கள் பஸ்கள் மற்றும் ஆட்டோக் களில் பயணம் செய்யும் போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக மாணாக்கர்கள் பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும். கூடுதலாக மாணாக்கர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதித்தல் கூடாது.


* பஸ்களின் மேற்கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு விதிகள்


* சாலையில் செல்லும் போதும், சாலையைக் கடக்கும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்கூடாது எனவும், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனை தாண்டிச் செல்லக்கூடாது எனவும், பாத சாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்த வேண்டும்.

* போக்குவரத்துக் காவலரின் சிக்னல்களுக்கு கட்டுப்பட்டு, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப் பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


பேருந்து பயண அட்டை

* பஸ்களில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்களை அடையாளம் கண்டு, அம்மாணவருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், அம்மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்கிட வேண்டும்.


* பள்ளி வகுப்பு ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கைச் செய்யப்பட்டும், தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் விலையில்லாப் பேருந்துப் பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் இயக்கக்கூடாது


* காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கனவே, வழங்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியினை எடுக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.


* 16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக்கூடாது என தெரிவித்தல் வேண்டும்.


* மேலும், பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வர நேரிட்டால், அவர்கள் வாகனத்தின் சாவியினை எடுத்து வைத்து, அம்மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப்பின் வாகனத்தின் சாவியினை ஒப்படைத்தல் வேண்டும்.

செல்போனுக்கு அனுமதி இல்லை

* பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்துவர அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள் செல்போனை கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் மூலம் வழங்கி, மாணவர்கள் அவற்றை பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement