Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி 9.14 சதவீம்! கிருஷ்ணகிரி, சென்னை பள்ளிகள் முதலிடம்

தமிழகத்தில் இரு வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு எழுதிய மாணவர்களில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த ஆண்டும், மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வழக்கம் போல், நான்காவது ஆண்டாக, அரசு பள்ளிகள் மாநில, 'ரேங்க்' பெறவில்லை. 


கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில், ஆங்கில வழியில் படித்த இருவர், 1,195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில், முதலிடம் பிடித்து உள்ளனர்.தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி துவங்கி, ஏப்.,1ம் தேதி முடிந்தது. இதற்கான முடிவுகள், மே மாத துவக்கத்திலேயே வெளியாகும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் காரணமாக, தேர்வு முடிவு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று காலை, 10:31 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


* கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஊத்தங்கரை, மெட்ரிக் பள்ளி மாணவர் ஜஷ்வந்த், மாணவி ஆர்த்தி ஆகியோர், 1,200க்கு, 1,195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளனர்.


* திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, 1,194 மதிப்பெண் எடுத்து, மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.* நாமக்கல் மாவட்டம், எம்.கண்டம்பாளையம், எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளி மாணவி வேணு ப்ரீத்தா, 1,193 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில், மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.


* நான்கு பேரும், தமிழை முதல் பாடமாக எடுத்து, ஆங்கில வழியில் படித்தவர்கள்.* பிரெஞ்ச் மொழியை முதன்மை பாடமாக எடுத்த மாணவர்களில், சென்னை, நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளி மாணவி சத்ரிய கவின், 1,195 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.


* தமிழ் வழியில் படித்த மாணவர்களில், மதுரை, குயவர் பாளையம், செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளி மாணவி நாகநந்தினி, 1,187 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.பிளஸ் 2 தேர்வை தமிழகம் முழுவதும், 8.33 லட்சம் பேர் எழுதினர். 


இவர்களில், 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 0.8 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டுகளை போல், இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியரில், 94.4 சதவீதம் பேர்; மாணவர்களில், 87.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இந்த ஆண்டு இயற்பியலில் மிகவும் குறைவாக, ஐந்து பேர் மட்டுமே, 'சென்டம்' எடுத்துஉள்ளனர். கணித பதிவியலில், அதிகபட்சமாக, 4,341 பேர், சென்டம் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், வினாக்களில் பிழைகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.


ஆனால், வேதியியல் பாடத்தில் தான், கடந்த ஆண்டை விட அதிகமாக, 1,703 பேர் சென்டம் வாங்கியுள்ளனர். ஆனால் எளிதாக இருந்ததாக கூறப்பட்ட, தாவரவியல், விலங்கியல் பாடங்களில், சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், 96.92 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடத்திலும்; வேலுார் மாவட்டம், 83.13 சதவீதம் தேர்ச்சி பெற்று, இறுதி இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளை போல், தற்போதும் அரசு பள்ளிகள் மாநில, 'ரேங்க்' பெறவில்லை. 


மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் மாற்றி, சமச்சீர்க்கல்வி அறிமுகம் செய்தது முதல், அரசு பள்ளிகளின் மாநில ரேங்க் கடும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டில் இதேபோன்ற நிலையே இருந்ததால், அரசு பள்ளிகளை மாநில ரேங்க் வர வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்தனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement