Ad Code

Responsive Advertisement

அப்பாடா... சனிக்கிழமை முதல் மழை இருக்காது.

ஒரு ரவுண்டு கொலை வெறி மழை, இப்போது தான் முடிந்துள்ளது. அதற்குள்,'மறுபடியுமா...!' என, அசர வைக்கும் வகையில், 'சென்னையில் மேலும், 250 செ.மீ., மழை கொட்டப் போகுது!' என, 'வாட்ஸ் ஆப்' வதந்தி, பீதியை கிளப்பி வருகிறது. 'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கப் போவதில்லை' என, 'அக்யூவெதர்' இணையதளத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் கிரிஸ்டினா பிடிநோவ்ஸ்கி, நிம்மதியளிக்கும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


வங்காள விரிகுடாவின் வட பகுதியில் இருந்து உயர்ந்த காற்றழுத்த மண்டலம், இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இந்த வாரஇறுதியில், அனேகமாக சனிக்கிழமை முதல் வறண்ட காற்று, வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களுக்கு மழையை தள்ளிவிடும். அதோடு, அரபிக் கடலில் உருவாகி உள்ள இரண்டு புயல் சின்னங்களால் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் டில்லியில் மழை பெய்யும்;

டில்லிக்கு வடக்கே பனிப்பொழிவு இருக்கும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். மேற்படி காற்றழுத்த நிலை மாற்றத்தால், இந்த பருவத்தில் இனி, சென்னை மற்றும் தமிழகத்தின் வட பகுதியில் மழை இருக்காது. ஆனால், தமிழகத்தின் தென் பகுதி மற்றும் கேரளாவில், மிதமான மழை இருக்கும். ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்செவ்வாய் கிழமை வரை கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கு, இரண்டு நாட்கள் மட்டும் தான் உள்ளன; பல்லை கடித்து பொறுத்துக் கொள்வோம்.


மீண்டும் கனமழை எச்சரிக்கை:


'வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால், சென்னை முதல் வேதாரண்யம் வரை உள்ள கடலோர பகுதிகளில், அடுத்த 48 நேரத்துக்கு, கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம்,நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்க கடலில், இலங்கைக்கும், குமரி கடலுக்கும் இடையே ஏற்கனவே மையம் கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலையால், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாமாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலின் தென் மேற்கு பகுதியில், புதிதாக, மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாட்டங்களில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும். 

குறிப்பாக, சென்னை முதல் வேதாரண்யம் வரையிலான கடலோர பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். அவ்வப்போது கனமழை பெய்யக் கூடும்.நேற்று காலை, 8:30 மணிவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - 16; கடலுார் மாவட்டம், பண்ருட்டி - 13; அரியலுார் மாவட்டம், ஜெயகொண்டம், நாகப்பட்டினம் மாவட்டம், ஆனைக்காரன் சத்திரம், வேதாரண்யம், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement