Ad Code

Responsive Advertisement

31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: சமூக நலத்துறை

வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர் தெரிவித்தனர். தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. வெள்ளத்தால் மாணவர்களின் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் பறிபோயின. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 

இதற்காக, சமூக நலத் துறை சார்பில் 31 ஆயிரம் சீருடைகளை தைத்து பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளதாக சமூக நலத் துறை வட்டாரங்கள் கூறின. இதுகுறித்து அந்தத் துறை அலுவலர்கள் கூறியதாவது:
 

வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கு சீருடைகள், இணை சீருடைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
 

இதன்பேரில், கைத்தறி, துணி நூல் துறையிடம் துணிகளைப் பெற்று, கூட்டுறவு மகளிர் சங்கங்கள் சார்பில் தைத்து 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் சீருடைகள் இழந்தோருக்கு 31,303 புதிய சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

இதன்படி, சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவைப்படும்பட்சத்தில் பள்ளிகல்வித்துறையின் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement