Ad Code

Responsive Advertisement

15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?

சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.


புதிய விதிமுறைகள்
கடந்த, 1973ல், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் வந்தது. 1976ல், மெட்ரிக் பள்ளிகள் எல்லாம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தன.ஆனால் தமிழக அரசு, தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தில், மெட்ரிக் பள்ளிகளை சேர்க்காமல், தனியாக, 'மெட்ரிக்குலேஷன் வாரியம்' என்ற புதிய அமைப்பை உருவாக்கி, பள்ளிகளை அதன் கீழ் கொண்டு வந்தது.இந்த வாரியத்திற்கு, 1977ல் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. தனி வாரியத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகள் இயங்கினாலும், பி.யூ.சி., முறைக்கு பதில், பிளஸ் 2 பாட திட்டத்தை, மெட்ரிக் பள்ளிகள் பின்பற்ற துவங்கின. அதனால், மெட்ரிக் வாரியம் கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.



ஆனால், அரசு கலைக்காமல் தனியாக இயங்க செய்தது. எனவே, தற்போதைய பாடத்திட்டப்படி, மெட்ரிக் வாரிய பள்ளிகளுக்கு, சட்ட அந்தஸ்து இல்லை என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, பா.ம.க.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'மெட்ரிக்குலேஷன், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கான விதிமுறைகள் சட்டப்பூர்வம் அற்றவை. எனவே, இப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றை ஒழுங்குமுறைப்படுத்த, மாநில அரசு முன் வரவேண்டும்' என கூறியிருந்தார்.இந்த வழக்கில், ஜூனில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்த, நிபுணர்கள் குழு அமைத்து, வரைவு சட்டம் உருவாக்க வேண்டும். பின், மக்களின் கருத்து கேட்டு, சட்டமாக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
ஓராண்டுக்குள்...



இதைத் தொடர்ந்து, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ஆளுடையா பிள்ளை தலைமையிலான இந்தக் குழுவினர், இரு தினங்களுக்கு முன், சென்னை யில் முதல் ஆலோசனை கூட்டத்தை முடித்துள்ளனர்.அனைத்து அங்கீகாரம் பெற்ற மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகள் அனைத்தையும், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதற்கட்ட வரைவு சட்டம், ஓராண்டுக்குள் உருவாக்க, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement