Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுமா?- போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கு ஜனவரி முதல் நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் குரூப்-பி சார்நிலைப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்படுமா? என்று போட்டித்தேர்வுக்குப் படித்து வரும் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தேவையில்லாத சிபாரிசுக்கும், ஊழலுக்கும் வழிவகுப்பதாகக் கூறி மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 2016ஜனவரி முதல் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு பணிகளில் உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், கஸ்டம்ஸ் மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி, உதவி அமலாக்கப்பிரிவு அதிகாரி, அஞ்சல்துறை ஆய்வாளர், மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப்-பி பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இருக்காது.

எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு பணி உறுதியாகிவிடும்.குரூப்-பி, சி, டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வை மத்திய அரசு ரத்துசெய்திருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் குரூப்-பிசார்நிலைப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வை ரத்துசெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் படித்து வரும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.

தமிழக அரசில் சார்நிலைப் பணிகளாக கருதப்படும் நகராட்சி ஆணையர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,பேரூராட்சி நிர்வாக அதிகாரி (கிரேடு-2) போன்ற பதவிகள் குரூப்-பி பணிகளின் கீழ் வருகின்றன. 

இதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு (மெயின் தேர்வு) 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றிபெற நேர்காணல் மதிப்பெண் முக்கியம் என்றாலும் எந்த பணி என்பதை முடிவுசெய்வதில் அதற்குப் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் எழுதுவது குரூப்-2 தேர்வைத்தான்.மத்திய அரசைப் போல் தமிழகத்திலும் குரூப்-பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வை அரசு ரத்துசெய்ய வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் கூறும்போது, “ஆளுமைத்திறன் அவசியம் தேவைப்படும் குரூப்-1 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு தேவைதான். ஆனால், சார்நிலைப்பணிகளுக்கு நேர்காணல் அவசியமில்லை. நேர்காணல் நடத்த வேண்டியிருப்பதால் தேவையில்லாமல் பணிநியமனத்துக்கு காலதாமதம் ஆகிறது. எனவே, மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் குரூப்-பி பணிகளுக்கு நேர்முகத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.


இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி கூறும்போது, “குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேர்முகத்தேர்வு தேவைதான். ஆனால், பெரும்பாலான அரசு பணிகளுக்கு நேர்முகத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. நேர்முகத்தேர்வை நீக்கினால் தகுதியும், திறமையும் மிக்கவர்களின் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். எனவே, தமிழக அரசும் நேர்முகத்தேர்வை தாராளமாக ரத்துசெய்யலாம். அதேநேரத்தில் எழுத்துத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும். “ என்றார். “அரசு பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படுவது பணம் சம்பாதிப்பதற்கும், மோசடி நடப்பதற்கும்தான் வழிவகுக்கும். எழுத்துத்தேர்வு மூலம் திறமை அடிப்படையில் பணி வழங்கிவிடலாம். நேர்முகத்தேர்வு தேவையே இல்லை” என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் வி.பாலமுருகன் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement