Ad Code

Responsive Advertisement

ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் வீட்டுக்கு போ! தலைமை ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, பள்ளியை அடிக்கடி பூட்டி செல்வதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியரின் செயல்பாடால், தற்போது, 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கடந்த, 17ம் தேதி வந்த மாணவர்கள், பள்ளி பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மற்றொரு ஆசிரியர் விடுமுறையில் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் வராததால், மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். தகவலறிந்த, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி, நேரடியாக பள்ளியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம், பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின், கஞ்சம்பட்டி பள்ளியிலிருந்து, ஒரு ஆசிரியரை வரவழைத்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ''உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காந்திமதி தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி, தெற்கு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன் கூறுகையில், ''பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததுடன், பள்ளியை பூட்டிச் சென்றார்; 'சஸ்பெண்ட்' உத்தரவை, தலைமையாசிரியர் பெற மறுத்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் முன்னிலையில், பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது; அவருக்கு, தபால் மூலமும் சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி உதவியாசிரியர் மூலமாக, பள்ளி தொடர்ந்து இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.

இதே போல், ஆனைமலை ஒன்றியம், கன்னியம்மன் கோவில் காலனியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், இவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தனர்.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'தவறு செய்த ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement