அதிக படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமா, 72, மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பிரபல நடிகை மனோரமா சென்னை, தி.நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு, மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். நள்ளிரவு, 11:20 மணிக்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார்.
பின்னர், 1958ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமானார். 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலமானார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் கண் திறந்தது படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் திருமணம் செய்து கொண்டார். பூபதி என்ற மகன் உள்ளார்.இவர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 'பத்ம ஸ்ரீ', தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். இவரது நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது
நடிகை மனோரமா வாழ்கை வரலாறு:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கோபிசாந்தா. தென்னிந்தியாவில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.
"ஆச்சி' மனோரமா
தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1943, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பின் இவரது குடும்பம் வறுமை காரணமாக காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தனர். மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். "யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம். "அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம்.
நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு "மனோரமா' என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
வெள்ளித்திரைக்கு பயணம்
நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தார். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.
பாடல்
"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார். "தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய "வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. "டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , "நாட்டு புற பாட்டு ஒன்னு...' , "மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.
ஆறு மொழிகளில்
மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக்கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
ஜில் ஜில் ரமாமணி
"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்கை வைத்தார்.
விருதுகள்
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் "கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார்.
முக்கிய நிகழ்வுகள்
* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.
* "கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
* "குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார்.
* "நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று.
* அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோராமா நடித்துள்ளார்.
* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார்.
* ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ', இவரை "பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார்.
* மனோராமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார்.
* "உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.
* "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "காட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த "ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார்.
* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்'.
நடித்த சில முக்கியபடங்கள்:
5 தலைமுறை நடிகை
*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*சின்னக்கவுன்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ரசிகன்
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்
*

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை