Ad Code

Responsive Advertisement

குட்டையில் மூழ்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

பள்ளி நேரத்தில் வெளியே சென்ற மாணவன், குட்டையில் மூழ்கி பலியானான். 'பள்ளி நேரத்தில், மாணவன் வெளியே சென்றது எப்படி?' எனக் கேட்டு, தலைமை ஆசிரியருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 

வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த, சின்னா கவுண்டனுார் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ், 12, ஜெயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று, மதிய உணவு இடைவேளையில், மாணவ, மாணவியர் சாப்பிட்டுவிட்டு, பள்ளி வளாகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். சிலர், பள்ளி அருகிலுள்ள குட்டைக்கு விளையாட சென்று இருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, குட்டையில், 5 அடி தண்ணீர் தேங்கியிருந்தது.

இதனால், சதீஷ், எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து, சேற்றில் சிக்கிக் கொண்டான். அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின், சதீஷை மீட்டு, புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியதாக கூறப்படுகிறது. 'பள்ளி நேரத்தில், மாணவர்கள் வெளியே சென்றது எப்படி; அதற்கு, யார் அனுமதி அளித்தது. யாருடைய அலட்சியத்தால், இச்சம்பவம் நடந்தது' என, பல கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, தலைமை ஆசிரியர் அளிக்கும் பதிலின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement