இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், கலந்தாய்வு மேலும் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், என்.சி.டி.இ.-யின் புதிய வழிகாட்டுதலின்படி (2014 வழிகாட்டுதல்) பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் கோரப்பட்டது.
ஆனால், என்.சி.டி.இ. இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதே நேரம் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் புதிய வழிகாட்டுதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், பி.எட். இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.
இதனிடையே தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. மேலும் ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,
2015-16 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வு நடத்த திட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து நடத்த தயாராக உள்ளது. இந்த நிலையில், சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதன் காரணமாக பி.எட். சேர்க்கை மேலும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது: படிப்புக் காலம் முதன் முறையாக 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறபோது, அதற்கான பாடத் திட்டம் சேர்க்கை நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளுக்கும் குறிப்பாக தன்னாட்சி கல்லூரிகளுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதோடு, உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம், ஓரிரு நாள்களில் கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் விண்ணப்ப விநியோகத்தை தொடங்குமாறு வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், உயர் கல்வித் துறையை அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற காரணங்களால், 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, நிகழாண்டில் பி.எட். ஓராண்டாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது
என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை