Ad Code

Responsive Advertisement

குரூப் - 2 தேர்வில் முதல் 10 இடங்களில் பி.இ., பட்டதாரிகள் வணிகவரித்துறை துணை ஆணையர் பதவி ஒதுக்கீடு

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் -- 2 தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றதில், முதல், 10 இடங்களில், பி.இ., பட்டதாரிகள் பிடித்துள்ளனர்.

முதன்மை தேர்வுகுரூப் - 2வில் இடம்பெறும் வணிகவரித் துறை துணை ஆணையர், சார் - பதிவாளர் உள்ளிட்ட, 19 பதவிகளில், 1,130 காலியிடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு, 2013 டிசம்பரில் நடந்தது; அதில், 4.19 லட்சம் பேர் எழுதினர்; 11,497 பேர் தேர்ச்சி பெற்று, கடந்த ஆண்டு நவம்பரில், முதன்மை தேர்வு எழுதினர்.இதில், 5,635 பேர் தேர்ச்சி பெற்றனர்; மார்ச் மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது; 2,266 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களில், 2,222 பேருக்கு, பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது.


தினமும், 300 பேர் வீதம், வரும், 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கிறது. முதல் நாள் கலந்தாய்வில், முதல், 10 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, தேர்ச்சி ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் மற்றும் செயலர் விஜயக்குமார் ஆகியோர் வழங்கினர். தேர்வானவர்களில் அமுதா என்பவரை தவிர, மற்ற ஒன்பது பேரும், துணை வணிகவரித் துறை ஆணையர் பதவியை தேர்வு செய்தனர். 

எட்டு பேர்முதல், 10 இடங்களில் வந்தவர்களில், விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜெயப்ரீதா என்ற எம்.இ., பட்டதாரி, முதல் இடத்தைப் பெற்றார். முதல், 10 இடங்கள் பிடித்தவர்களில் எட்டு பேர், பி.இ., பட்டதாரிகள். மற்ற இருவரில், ஒருவர் பி.சி.ஏ., - மற்றொருவர், பி.ஏ., ஆங்கிலம்.

கலந்தாய்வு ஒத்திவைப்பு

ஓணம் பண்டிகைக்காக, வரும், 28ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று நடக்க இருந்த, டி.என்.பி.எஸ்.சி., கலந்தாய்வு, வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement