Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க பிரத்யேக சிகிச்சை குழு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குழந்தைகள் நலக்குழு ஒன்றை மாநில சுகாதாரத்துறை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அக்கறை காட்டாத நிலையில் பல்வேறு பாதிப்புகளில் இருந்து உடல்நலம் காக்க, 'பிளாக்' வாரியாக சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு பெண், ஆண் டாக்டர்கள், நர்ஸ், மருந்தாளுநர், ரத்த பரிசோதகர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

இவர்கள் அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று உடல் நலக்குறைபாடு, எதிர்ப்பு சக்தி குறைவு, ரத்த சோகை, சத்து குறைதல் உட்பட குறைபாடுகளை கண்டறிந்து, தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் 'ஜீப்' ஒன்று அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இவற்றில் தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்களையும் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கல்வி நிலையங்களில் வைத்தே பரிசோதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.கூடுதல் சிகிச்சை தேவை எனில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியோடு இதற்கென பிரத்யேகமாக குழந்தைகள் நலத்துறை டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய, மாநில சுகாதாரத்துறை இணைந்து இத்திட்டத்தை அமல்படுத்துகிறது. தற்போது இதற்கான டாக்டர்கள் பிளாக் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் தவிர, மற்ற டாக்டர்கள் பொறுப்பேற்று பணியை துவங்கியுள்ளனர். விரைவில் நர்ஸ் உட்பட பிற பணியாளர்கள் நியமிக்கப்படும்போது, இச்சிறப்பு குழுவின் பணி ஓரிரு மாதத்தில் பள்ளிகளில் முழுமையாக இருக்கும்,” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement