அரசு பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது என பிரான்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிசு பெற்ற புதுச்சேரி மாணவர்கள் கூறியுள்ளனர்.

புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக 'அறிவியல் உருவாக்குவோம்' என்ற போட்டியை புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி வருகின்றது.

அதன்படி, அரசு பள்ளிகளில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஒரு குழுவுக்கு 5 பேர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 'அறிவியல் உருவாக்குவோம்' போட்டிக்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களிடமிருந்து, கடந்த ஜனவரியில் 40 ஆய்வுத்திட்டங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து 12 ஆய்வுத்திட்டங்கள் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த 12 ஆய்வுத் திட்டங்களில் இருந்து நான்கு ஆய்வுத்திட்டங்கள் பரிசுக்காக பிரான்ஸ் பல்கலைக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது. இதில், 'வானிலை நிலையங்களை உள்ளூரில் எப்படி அமைக்கலாம்' என்ற ஆய்வுத் திட்டத்திற்காக முதல் பரிசை செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வென்றனர். இந்த நான்கு பள்ளிகளுக்கும் 600 யூரோ பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாணவர்கள் பேசும்போது, ''அரசுப் பள்ளியில் படிக்கிறோம் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறோம். காரணம் அரசுப் பள்ளி என்பதால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும் கிடைத்தது. அதனால்தான் எங்களால் ஜெயிக்கவும் முடிந்தது’’ என்றனர் சந்தோஷத்தோடு.