Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் : தமிழக அரசு தகவல்

கடந்த 2011-ஆம் ஆண்டு பாமகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் ரயில்வே அமைச்சர் ஆர்.வேலு , சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. இதில், தனியார் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1973-இன் கீழ் செயல்படுகிறது. அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொதுவான பாடத்திட்டம், பொதுத் தேர்வுகள்தான். தனியார் பள்ளிகள் தொடங்குவதற்கு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைச்சட்டம் இருக்கும் போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

இது, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுவதாகும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதற்காகவும், புதிய தனியார் பள்ளிகளை திறப்பதற்காகவும் தமிழக அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வந்தது.எனவே, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளை சட்ட விரோதம் எனவும், செல்லாதது எனவும் அறிவிக்க வேண்டும். மேலும், இந்த விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றுகூறியிருந்தார்.இந்த மனுவை கடந்த ஏப்ரல் 8ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அமர்வு, கடந்த 2011-ஆம் ஆண்டு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று(ஜுன் 17) வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் , தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளைகட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக, விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த புதிய சட்டம் தொடர்பாக உயர் மட்டக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement