காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் எச்சரித்தார்.
செங்கல்பட்டு பெரியநத்தம் தட்டாண்மலை தெருவைச் சேர்ந்த ஞானமணி, மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் அளித்த புகார் மனு:
எனது மகன் தன்வஷ்ராஜ் செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு படித்தார். அவர், தேர்வில் தோல்வி அடைந்ததால், அவரை பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாத்தினரிடம் கேட்டதற்கு, 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி காட்ட வேண்டும், அதனால் உங்கள் மகனின் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும் என்கின்றனர். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் எனது மகனை மீண்டும் அதே பள்ளியில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அநேக அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது என்று மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மரம் மாசிலாமணியும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு:
மாவட்டம் முழுவதும் அனைத்து தனியார், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியல், கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு படித்து, தேர்ச்சி பெறாத மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்து, அவர்கள் தற்போது எங்கு படிக்கின்றனர் என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பள்ளியை விட்டு நீக்கப்படும் மாணவர்களை மீண்டும் அதே பள்ளியில் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கத் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கூறுகையில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் 9-ஆம் வகுப்பில் சரியாகப் படிக்காத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்குவது வாடிக்கையாக உள்ளது. சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டியது பள்ளியின் கடமையாகும்.
இதுபோன்ற மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி விட்டு 100 சதவீதம் தேர்ச்சி காட்டுவதில் எந்த வளர்ச்சியும் இல்லை. எனவே மேற்கண்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர், நிர்வாகத்திடம் பேசி, மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை