Ad Code

Responsive Advertisement

தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு - பள்ளிக்கல்வித் துறை தீவிரம்

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கடந்த, 2003 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில், 5,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, 2006ல், தி.மு.க., ஆட்சியில், காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 2003 - 06 வரையிலான பணிக்காலம், பணி முறிவாக அறிவிக்கப்பட்டது. 
இதனால், இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதற்கு, ஆசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் கிடைக்கவில்லை; பணிக்காலத்தை இழந்தனர்; பதவி உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது.
பணி வரன்முறை கோரி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட, பல ஆசிரியர் அமைப்புகள், அரசுக்கு, 10 ஆண்டுகளாக மனு கொடுத்தன.
தமிழக முதல்வராக, மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்றதும், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 
இதற்காக, 2003 - 06ல், பணி வரன்முறை பெறாத ஆசிரியர்களின் பணிமுறிவுக் காலம் மற்றும் அதற்கான ஊதிய செலவு பட்டியலை அனுப்ப, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''இந்த முடிவால், 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணிக்காலம் கிடைப்பதுடன், அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க, கூடுதல் வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement