Ad Code

Responsive Advertisement

நண்பேன்டா! : 30 ஆண்டுகளுக்கு பின் மலரும் நினைவுகள் : பகிர்ந்த அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள்

'மரியாதை என்பதன் முழுமையான விளக்கமாக திகழ்ந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது தங்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாக' முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டது. தற்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, ஆசிரியர்களின் மீதான மதிப்பை இழந்து வரும் சூழ்நிலையில், இப்பள்ளியில் 1984-85ம் ஆண்டு பத்தாம் வகுப்பு ஆங்கிலப்பிரிவில் படித்த மாணவர்கள் அக்காலத்தில் அவர்களுக்கு பாடம் கற்பித்த சிவசுப்ரமணியம், நடராஜன், துரைராஜ், பழனிசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட ஆசிரியர்களை நினைவு கூர்ந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.
30 ஆண்டுகளுக்கு முன் பள்ளி வளாகத்தில், மாணவர்களாக வலம் வந்த வகுப்பறை மற்றும் இதர பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள், கடந்த கால நினைவுகளில், மூழ்கி, தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
ஆசிரியர்கள் பேசியதாவது
நீண்ட காலத்திற்கு பின்னர், எங்களிடம் படித்த மாணவர்கள் இத்தகைய விழா நடத்துவது பெருமையாக உள்ளது. எந்த பள்ளியில் படித்தாலும், வாழ்வில் சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற லட்சியமும், கற்ற பாடத்தை முறையாக பயன்படுத்தும் அறிவு இருந்தால் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு இம்மாணவர்கள் எடுத்துகாட்டாக உள்ளனர்.
பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் இம்மாணவர்களுக்கு பாடம் கற்பித்ததில் எங்களுக்கும் பெருமையாக உள்ளது. இன்றைய தலைமுறையினரும் இதுபோன்று பள்ளியில் ஆசிரியர்களையும் வீட்டில் பெற்றோரையும் மதிப்பவர்களாக இருக்க வேண்டும். கண்டிக்க வேண்டிய இடத்தில், கண்டித்தும், ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் அரவணைத்தும் சென்ற ஆசிரியர்களை என்றும் மறக்க முடியாது. இவ்வாறு கூறினர்.
மாணவர்கள் பேசும் போது, ''மரியாதை என்பதன் முழுமையான விளக்கத்தை நாங்கள் எங்கள் ஆசிரியர்கள் மூலம்தான் கற்றோம். இன்று பிற தேசங்களில் பணியாற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு ஆசிரியர்களே முதல் காரணம். பள்ளியில், சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போன்ற உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.
முன்னாள் மாணவர் பி.செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவில், 25 மாணவர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement