Ad Code

Responsive Advertisement

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.


இது குறித்து அவர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களு்ககு 20-ம் தேதி அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:

மே 25-ம் தேதி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி கீழ்கண்ட அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அவை உறுதியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை அன்புடன் வரவேற்று, நல்லதொரு கற்றல் சூழல் உருவாக்கித் தருவதை உறுதி செய்ய வேண்டும். 

அரசு அளித்துள்ள விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா சீருடைகள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட வேண்டும். விலையில்லா பேருந்து பயண அட்டைகள் தேவைப்படும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் காலதாமதமின்றி, வில்லையில்லா பேருந்து பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் முன்தினமே உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல் புதர் போன்றவை இல்லாமல் இருப்பதையும் பாதுகாப்புையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி திறப்பதற்கு முன்தினம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்புறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டம், பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு வசதி ஆகியவைகளை பள்ளி திறக்கும் முன்தினமே தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

ஆங்கிலப் பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையினை உயர்த்தி மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு காலதாமதமின்றி குறித்த நேரத்தில் வருகை புரிதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசாணை (நிலை) எண் 264-ன்படி காலை வழிபாட்டு முறை, மாணவர்களின் திறன்களையும் தன்னம்பிக்கையும் வெளிக்கொணரும் விதமாக பேசுதல், நடித்தல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி கூறுதல், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள் தவறாமல் நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


பள்ளி வயதுக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் அட்டைகள், கணித உபகரணப் பெட்டி, கணினி, பல்நோக்கு கருவி, தொலைக்காட்சிப் பெட்டி, டிவிடி, புத்தகப் பூங்கொத்து, 75-க்கும் மேற்பட்ட பாடவாரியான குறுந்தகடுகள், அறிவியல் உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement