Ad Code

Responsive Advertisement

ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்

தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால், கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு, அரசு உதவிபெறும், சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கல்வியல் கல்லூரிகள் என, 658 கல்லூரிகள் செயல்படுகின்றன.
இக்கல்லூரிகளில் பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., - பி.எச்.டி., போன்ற பட்டப் படிப்புகளில், நுழைவுத்தேர்வு மூலம் அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லூரிகளில் கல்லூரி ஒதுக்கீட்டிலும் சேர்க்கை நடக்கிறது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியே வந்த ஆசிரியர்களை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்ததில், பலர் ஆங்கிலத்தில் பேச திணறும் நிலை கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது ஆங்கில வழிக்கல்வி அதிகரித்து விட்ட நிலையில், தேசிய கற்றல் நிகழ்ச்சிகளுக்காக பல மாநிலங்களுக்கும், சர்வதேச கற்றல் நிகழ்ச்சிகளுக்கு, பல நாடுகளுக்கும் ஆசிரியர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச திணறுவதால், இந்நிகழ்ச்சிகளில் சரியாக பங்கேற்க முடியவில்லை. இதேபோல் மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் பாடம் கற்றுத்தருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முதல், பி.எட்., கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும், புரிந்து கொண்டு பதிலளிக்கவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலையுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பி.எட்., கல்லூரிகளும் தங்கள் மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தாமல், ஆங்கிலப் பயிற்சிக்கு அனுப்பலாம் என்று, கல்வியல் பல்கலையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement